சென்னை,
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடவை சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றெடுத்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. மேலும் இதுவரை இல்லாதவகையில், பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்த சூழ்நிலையில், த.வெ.க.வில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் அ.தி.மு.க.வில் இருந்து சில எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. அ.தி.மு.க. வில் சிலர் த.வெ.க. ஆதரவு நிலை எடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி, சுதாரித்துக்கொண்டு அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை புதுச்சேரி யில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்தார்.
விஜய் ஒரு புறம் முதல்-அமைச்சராக தி.மு.க. கூட்டணி கட்சிகளிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதற்கிடையில் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக சிலர் குற்றம் சுமத்தி பேசி உள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்த கூட்டம் நிறைவடைந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போர்க்கொடி
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஒன்று கூடினர். அங்கு பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது.
தவெகவுக்கு ஆதரவு
இந்த நிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் அதிமுக சந்தித்த பிளவு போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் (35 பேர்) தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த 37 உறுப்பினர்களே "உண்மையான அதிமுக" எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும்.
இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இந்த 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களையும் கவர்னரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் 118 என்ற மேஜிக் எண்ணை எட்டிவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 35 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால் விஜய்யின் பலம் சட்டசபையில் அசுர வேகத்தில் உயரும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சென்னையில் இன்று காலை 9 மணிக்கு கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை, நீக்குவதற்கு எம்.எல்.ஏ. கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது கட்சி கூட்டத் தில் எடுக்க வேண்டிய முடிவு என்று சிலர் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்சினை, இன்னும் ஒரிரு நாளில் மிகப்பெரும் பூகம்பமாக வெடிக்கும் என்று அர சியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.