சென்னை,
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு உற்பத்தி குறைந்ததால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்களுக்கு அதிக விலை கிடைத்து வந்தது.
அதாவது, ஏற்றுமதி விலையாக ஒரு கிலோவுக்கு தரத்தை பொறுத்து ரூ.2,600 முதல் ரூ.2,950 வரையும், உள்நாட்டு விலையாக கிலோவுக்கு ரூ.2,400 முதல் ரூ.2,600 வரையும் விற்பனை ஆனது.
தற்போது, ரம்ஜான் நோன்பு தொடங்கியிருப்பதால், அரபு நாடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஏலக்காய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
ஏற்கனவே, கிடைத்த ஆர்டர்களுக்கும் ஏலக்காய் அனுப்ப முடியாத நிலை உள்ளது. மேலும், ஏலக்காய் சீசனும் முடிவடைய இருப்பதால், ஒரு கிலோ ஏலக்காய் தற்போது ரூ.2,400-ல் இருந்து ரூ.2,250 ஆக விலை குறைந்துள்ளது. இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ரூ.150 வரை விலை குறைந்துள்ளதால், வர்த்தகமும் ரூ.1.50 கோடி வரை குறைந்துள்ளது.