தமிழக செய்திகள்

கோவையில் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் சிறுமிக்கு செலுத்தப்பட்டதா? - கலெக்டரிடம் புகார்

சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கோவை,

நெசவு தொழிலாளி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பவன்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது நெசவு தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு முதலில் ஒரு மகன், மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதன்பின்னர் ஒரு மகன் பிறந்தான். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு எனது மகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளது என்றனர்.

எச்.ஐ.வி. பாதிப்பு

இதன்பின்னர் எனது மகளை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு எனது மகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினோம். இதனிடையே எனது மகளின் காது அருகே கட்டிகள் ஏற்பட்டன. இதனால் நாங்கள் டாக்டரி டம் எனது மகளை அழைத்து சென்றோம். பின்னர் எனது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

இதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எங்கள் இருவரில் யாருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரிக்கு நேரிடையாக சென்று இதுகுறித்து கேட்டோம்.

அப்போது நிர்வாகம் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூற வேண்டாம் என்று எங்களிடம் கூறினர். ஆனால் எங்களுக்கு எவ்வித நியாயமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரத்த தானம்

இதனிடையே கலெக்டர். பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிப்பதுடன், அது குறித்த அறிக்கையை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மட்டுமே செலுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட நபரிடம் பெறப்பட்ட ரத்தத்தை பிளாஸ்மா, ரத்த சிவப்பு அணு, வெள்ளை அணு என பிரிக்கப்பட்டு 3 நபர்களுக்கு செலுத்தப்பட்டது.

மீதம் உள்ள 2 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. இதேபோல் ரத்தத்தை தானம் வழங்கிய நபரை பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனவே அரசு ஆஸ்பத்திரி மூலம் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் வேறு எங்காவது அந்த சிறுமிக்கு ஊசி போட்டு இருக்கலாம். அதன்மூலம் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம் என்றனர்.