சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
2025-ம் ஆண்டிற்கான இந்திய குடிமைப்பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் கடந்த 6-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் மிகச்சிறந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 958 பேர் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 299 பேர் பெண்களாவர்.
அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பெற்றுள்ளார். ராஜா மொய்தீன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 18-வது இடத்தையும், தமிழக அளவில் 3-ம் இடத்தையும் சுருதி பெற்றுள்ளார். தமிழக அளவில் முதல் 3 இடங்களில் இருவர் பெண்கள் என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். தேர்ச்சி பெற்ற 56 பேரில் 19 பேர் பெண்கள் என்பது பெண் விடுதலைக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த ஆண்டு அருண்குமார், டாக்டர் நிஷாந்த் ஆகியோர் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இன்னும் அதிக அளவில் இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் சிறப்பாக மக்கள் பணியாற்றி நாட்டை முன்னேற்றுவதுடன் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.