தமிழக செய்திகள்

"கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது தெரியும்.." - மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய்

தீயசக்தி திமுகவை இந்த இடைத்தேர்தலில் நல்லா வச்சு வெளுத்து விடுங்க என்று முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.

கரூர்,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்க உள்ளார்.

பணமா? ஜனமா?

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது; எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்.

வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுகின்றனர்.

அன்றைக்கும் சொன்னேன்.. இன்றைக்கும் சொல்கிறேன்..நாளைக்கும் சொல்வேன்.. தில்லா சொல்வேன்... கெத்தா சொல்வேன்.

பணமா ஜனமா? அப்படி கேட்டால், என் ஜனம்தான் எனக்கு முக்கியம்.

பிரஷர் போட்டது யார்?

பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?

நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?

கரூர் காவலர்களை முழுமையாக நம்பினேன். அப்போது கரூர் காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்தது யார்? கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்து என்பது தெரியும்.

நினைவுச் சின்னம்

நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இனி இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாதுங்கறதுக்காக கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக எழுப்பப்படும்.

அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நான் ரீல் அல்ல ரியல் தாய்மாமன்.

PARTY FUND

பேசு பேசு என்று சொல்கிறார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள். PARTY FUND என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள்.

வாஷிங் மெஷின் Vs வெண்டிங் மெஷின்

நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்றாங்க. சோபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம். அரசியல் வியாபாரம் செய்வதற்கான vending மெஷினே திமுகதான்

TALK LESS WORK MORE

மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் ஏற்காது. மேகதாது அணை தொடர்பாக திமுக அரசு முறையாக வாதாடவில்லை.

மேகதாது அணை குறித்து எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறோம். TALK LESS WORK MORE என்பது தான் எங்கள் கொள்கை.

கரூர் கம்பெனி ஓனர்

கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.. இன்னொருத்தரு வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்காரு.(வேட்டைக்காரன் பட பாடலை பாடுகிறார்).

கூட்டுக் களவாணிகள்

தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது. கூட்டுக் களவாணிகள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா?. இடைத் தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள்.

தீயசக்தி திமுகவை இந்த இடைத்தேர்தலில் நல்லா வச்சு வெளுத்து விடுங்க...

லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப சந்தோசம்.

இப்போ நான் சொன்னதெல்லாம் ஒரு சாம்பிள் தான். இனிமே தான் அரசோட விஸ்வரூபத்தை நீங்க பார்ப்பீங்க..

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.