தமிழக செய்திகள்

காவிரி நீர் கடைமடை வரை தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

இந்த விவகாரத்தில் தவெக அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கு மிகுந்த கவலையளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரசு மெத்தனப்போக்கு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான இந்த விவகாரத்தில் தவெக அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய்யின் அரசு, அண்டை மாநிலமான கர்நாடக அரசிடம் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, முன்கூட்டியே தண்ணீரைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது மே மாத இறுதியிலேயே இதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கி, ஜூன் 12-ஆம் தேதி வழக்கமான தேதியில் அணை திறக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.

முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும்

இருப்பினும் தற்போதாவது அணை திறக்கப்பட்டிருப்பது ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், எந்தவிதத் தடையுமின்றி கடைகோடி விவசாயி வரை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தத் தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும். அத்துடன், ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், இடுபொருள் மானியங்கள் விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைக்கவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT