சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரபாகரன் பிறந்தநாளையொட்டி, அவரது படத்தை முகநூல் (பேஸ்புக்) தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல்தளம், ஒருநாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான வகையில் முகநூல் செயல்பட்டு வருகின்றது.
தமிழக தலைவர்களை களங்கப்படுத்த முயற்சிக்கின்றது; அவர்களது கருத்துகளை திரைபோட்டு மறைக்கின்றது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக முகநூல் தளம் இயங்கிவருகின்றது.
உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது. எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழக சட்டமன்றத்திற்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன். வெற்று இடத்தை காற்று நிரப்பியே தீரும்; முகநூலுக்கு மாற்று தளம் உருவாகியே தீரும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.