தமிழக செய்திகள்

பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்... அலைக்கழிக்க கூடாது - பதிவுத்துறை அமைச்சர்

தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவையில் வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்று பதிவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இன்று (09-06-2026) சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத் துறையின் 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான மாவட்ட பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், ஆகியோர் முன்னிலையில், அனைத்து துணை பதிவுத்துறைத் தலைவர்கள், அனைத்து உதவிப் பதிவுத்துறைத் தலைவர்கள் அனைத்து மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை) மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பணித்திறன் குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும், பொதுமக்களை அலுவலகத்தில் அமரவைத்தும், அவர்களுடைய தேவைகளை சரிவர பூர்த்தி செய்தும், தாமதம் இன்றி அன்றைய தினமே ஆவணங்களை பொதுமக்களிடம் திரும்ப வழங்குமாறும், அவர்களுக்கு பதிவு சம்மந்தமாக எழும் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும்படியும் பொறுமையுடனும் எடுத்துக்கூறுமாறும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செயல்படுமாறும் அமைச்சரால் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கட்டிட களப்பணிக்காக ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பார்வையிட்டு ஆவணதாரர்களுக்கு திரும்ப வழங்கப்படவேண்டும் எனவும், நிலுவை ஆவணங்களை மாவட்டப்பதிவாளர்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீர்வு அளித்திட வேண்டும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைந்திட அனைத்து முயற்சிகளையும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவையில் வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்து வழங்குமாறும், 2026-2027ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைய துரிதமாக செயல்படுமாறும், முழுமையான அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாடுடனும் தன்னலமற்று பணியாற்றுமாறும் அமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.