தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரமுள்ள அரிசி கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி

போதைப்பொருள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;

“அதிமுக ஆட்சி அமைந்ததும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10,000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் மற்றும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகத் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரமுள்ள அரிசி கொடுப்போம்.

மாற்றுத்திறனாளிகள், நடைபாதை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் புதிய தொழில் தொடங்க கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி வழங்கப்படும். அம்மா இல்ல திட்டத்தில் அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி அவர்களுடைய பாராட்டை பெற்ற அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். போதைப்பொருள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.