தமிழக செய்திகள்

போலீஸ் சீருடை அணிந்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

காட்பாடி கழிஞ்சூரை, போலீஸ் சீருடை அணிந்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்தனர்.

தினத்தந்தி

வேலூர்,

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் நேற்றுமுன்தினம் அங்குள்ள மெயின்ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது டிப்டாப்பாக போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் அவரை வழிமடக்கி தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். மேலும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள்மீது கிருபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடமிருந்து நழுவிய அவர் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் விருதம்பட்டை சேர்ந்த மத்தீன் (வயது43), அரிகரன் (24) என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து பலரிடம் பணம்பறித்ததும் தெரியவந்தது. அவர்கள் பதுங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியபோது போலீஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள், ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பணம் மற்றவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்டதா என்று விசாரித்தபோது அந்த பணத்திற்கு அவர்கள் சரியான கணக்கு காட்டியதால், பணத்தை அவர்களுடைய குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்துவந்ததும், போலீஸ் சீருடை இருக்கும் புகைப்படத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது