தமிழக செய்திகள்

கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன? - அன்புமணி கேள்வி

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கள்ளச்சாராய சாவுகள்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்த விசாரணை ஆணைய பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினாவாகும்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கருணாபுரம் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயத்தை குடித்தவர்களில் 70 பேர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர்; மேலும் 161 பேர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் பிழைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் அறிக்கை, 18 மாதங்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் அரசின் தோல்வி என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம்,‘‘ கள்ளச் சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். அவர்களின் துணையின்றி, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நச்சு சாராயம் வந்திருக்க முடியாது. இந்தக் கூட்டணி தகர்க்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் உரிமை ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கு தொடரப்போவதாக அச்சுறுத்தல்

கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் கள்ளச்சாராய வணிகத்திற்கு திமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முழு ஆதரவாக இருந்தனர் என்றும், திமுகவைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்பவரும், அவரது கூட்டாளிகளும் தான் நச்சு சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தேன். அப்போதைய ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், அப்போது நானும், பாமகவும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், இனிவரும் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்காமல் தடுத்தல் ஆகிய 3 வகைகளில் பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அளித்திருந்தது. கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் கூட, அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்ததிலிருந்தே திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் திமுக அரசு தவறி விட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினா. அதற்கு அரசு விடையளிக்க வேண்டும்.

அரசு வேலை வழங்க வேண்டும்

கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்வி ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவை அனைத்தையும் விட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தெரிவித்துள்ள ஒரு கருத்தும், அதைச் சார்ந்து அளித்துள்ள பரிந்துரையும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, தாராளமாக மது கிடைக்க வசதி செய்யப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டனர் என்று கவலை தெரிவித்திருக்கும் ஆணையத்தின் அறிக்கை,‘‘மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசு கடுமையாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயத்தையும், பிற போதைப் பொருள்களையும் முற்றிலுமாக ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவணிகத்தைக் குறைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் பரிந்துரைத்துள்ளது.

இது தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையான பரிந்துரை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT