மதுரை ,
விருதுநகர் ஆவின் பணி நியமன விவகாரம் தொடர்பாக, உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
விருதுநகரை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உள்ளிட்ட 41 நபர்கள் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், விருதுநகர் ஆவினில் தாங்கள் 2021 முதல் பணியாற்றி வருவதாகவும், ஆனால், நேரடி பணி நியமனங்களில் விதிகளை பின்பற்றாமல் பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறி, தங்களது பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, விருதுநகர் ஆவினில் பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.