தமிழக செய்திகள்

வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில்

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார்.

அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி அவர், குடும்பத்துடன் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.

அப்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டை விரலை உயர்த்தி காட்டி, சூப்பராக உள்ளது என்றார். அவர், கார் மூலம் மாலை கொடைக்கானலுக்கு செல்கிறார். இவர் இங்கு பாம்பர்புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். 2019 மக்களவை தேர்தலின் போது ஓட்டு பதிவிற்கு பின் கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரம் விடுதியில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தார். அத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலின் போது கொடைக்கானலில் தங்கிய நிலையில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்-அமைச்சரானார். 2024 மக்களவை தேர்தலின் போதும் கொடைக்கானலில் தங்கி இருந்தார். அதிலும் அமோக வெற்றி பெற்றார். தற்போது 2026 சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் தற்போது சென்டிமென்டாக அதே தனியார் விடுதியில் முன் தங்கியிருந்த அறையிலேயே ஓய்வெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.