தமிழக செய்திகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்னவானது? - அன்புமணி

உண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பதே ஏமாற்று வேலை தான் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

‘அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’ என்பதைப் போலத் தான் திமுக ஆட்சியில் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தவிருந்த நிலையில், அவர்களை ஏமாற்றும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவித்தது. அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி 10-ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டது. இவை அனைத்தையும் கடந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு அறிவித்தது. இந்த நாடகங்களையெல்லாம் நம்பி அரசு ஊழியர்களும் சில காலம் ஏமாந்திருந்தனர்.

ஆனால், திமுக அரசால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 65 நாள்கள் ஆகிவிட்டன. ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத இறுதியிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்ந்தவர்கள் ஆவர். திமுக அரசு கூறியவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருந்தால், கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு அத்திட்டத்தின்படி ஓய்வூதியப் பலன்களும், அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கு சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும் தான் காரணம் ஆகும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாததற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் அத்திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்படவில்லை என்பது மட்டும் தான். இது தான் அப்பட்டமான ஏமாற்று வேலையும், அரசு ஊழியர்களை முட்டாள்களாக்கும் செயலும் ஆகும்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்தில் அத்திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட திமுக அரசு நினைத்திருந்தால், அடுத்த ஒரு வாரத்தில் விதிகளை வகுத்திருக்க முடியும். அவ்வாறு வகுத்திருந்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வுக்காலப் பயன்களை வழங்கியிருக்க முடியும். பிப்ரவரி மாத மத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட துணை மானியக் கோரிக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கச் செய்திருக்க முடியும். ஆனால், அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசு எள்ளளவும் இல்லை. அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக திமுக அரசால் நடத்தப்பட்ட ஏமாற்று நாடகம் தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு ஆகும்.

உண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பதே ஏமாற்று வேலை தான். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களுடன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களை ஒப்பிட்டால் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும். ஆனால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது என்றால் அது எந்த அளவுக்கு மோசடியான, அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் அரசாக இருக்கும் என்பதை அறியலாம்.

தமிழ்நாடு அரசு நினைத்தால் பழைய ஓய்வுதியத் திட்டத்தையே எந்த நிதிப் பங்களிப்பும், நிபந்தனைகளும் இல்லாமல் செயல்படுத்த முடியும். ஆனால், அதற்கே துப்பில்லாத திமுக அரசு தான் 2030-ஆம் ஆண்டில் வானத்தை வில்லாய் வளைப்போம்; மணல் கயிராய் திரிப்போம்; பாறையில் இருந்து பாலைக் கறப்போம் என்று கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருக்கிறது. வாயால் வடை சுடுபவர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது; ஆனால், வடை மட்டுமின்றி அப்பளம், பாயசம், கூட்டு, பொறியல் என அனைத்தையும் வாயால் சுடும் முதல்-அமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. வெறுங்கைகளால் முழம் போடும் முதல்-அமைச்சரின் அறிவிப்புகளையெல்லாம் நகைச்சுவையாகத்தான் தமிழக மக்கள் பார்க்கின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அரசு வேலைகளை வழங்குவது, தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் பணிகளை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை நனவாகக் கூடியத் திட்டங்கள் ஆகும். ஆனால், இந்த நனவுத் திட்டங்களையே செயல்படுத்தாமல் கனவுத் திட்டங்களாக மாற்றிய திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து 2030-ஆம் ஆண்டுக்குள் கனவுத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகக் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்துக்கு போவதாகக் கூறுவதற்கு ஒப்பானதாகும். தமிழ்நாட்டு மக்களை சில நேரம் ஏமாற்ற முடியும்; ஆனால், எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது, இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.