தமிழக செய்திகள்

‘அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து சேகர்பாபு வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?’ - அமைச்சர் ரமேஷ் கேள்வி

அதிகாரிகளை வைத்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து சேகர்பாபு வேவு பார்க்கிறார் என அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி,

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எங்கள் மீது எந்த தவறும் கிடையாது, நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

நாங்கள் எந்த கோவில்களில் எல்லாம் ஆய்வு செய்கிறோம்? என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்கிறோம்? என்பதையெல்லாம் அதிகாரிகளை வைத்து வேவு பார்த்து, அதை சட்டமன்றத்தில் பேசுவது தவறு கிடையாதா? தன் மீது எந்த தவறும் இல்லை என்றால், அரசாங்க விஷயங்களை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஏன்?

மடியில் கனம் இருந்தால்தான் இது போன்ற வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். அரசு துறைக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு தவறுகளை செய்திருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் செய்த தவறுகளை இந்த ஆட்சியில் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அந்த பயம்தான் எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.