தமிழக செய்திகள்

பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசுக்கு என்ன தயக்கம்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

வாகன சட்டப்படி இதற்கு அனுமதி வழங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை,

பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசுக்கு என்ன தயக்கம்? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய பெரிய நகரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் பைக் டாக்சி சேவை என்பது மிகவும் அவசியமானது. இது பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த பைக் டாக்சி சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அபராதம்

தமிழகத்தில் இந்த பைக் டாக்சியை ஓட்டி செல்லும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர் அல்லது எச்சரித்து அனுப்புகின்றனர். இந்த பைக் டாக்சி இயக்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கார்த்திக் மற்றும் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உபயோகமாக உள்ளது

அப்போது தமிழக அரசு சார்பில் இந்த மனு தொடர்பாக அவகாசம் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில்:- இந்தியாவின் பல பகுதிகளில் இந்த பைக் டாக்சிகள் செயல்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

நீதிபதிகள் உத்தரவு

பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசுக்கு என்ன தயக்கம்? அதே நேரத்தில் நம் மாநிலத்தில் பைக் டாக்சியை செயல்படுத்த இயலுமா, மோட்டார் வாகன சட்டப்படி இதற்கு அனுமதி வழங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.