சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள் முதல்-அமைச்சர் விஜய்?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணை தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் பின் தொடர்ந்து சென்ற உங்கள் கட்சி நிர்வாகி ஒருவர், அப்பெண்ணின் ஜாதியை சுட்டிக்காட்டி இழிவாக பேசியதுடன், அத்துமீறி தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, ஜாதி ரீதியாக வசைபாடுவதிலும், பெண்களிடம் அத்துமீறுவதிலும் திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு முதல்-அமைச்சரே. குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவியும், சமூக விரோதிகளுக்கு கட்சிப் பொறுப்பும் கொடுத்து அழகு பார்ப்பது தான் உங்கள் மாற்று அரசியலா? உங்கள் கட்சிக்காரர்களைக் கூட கட்டுக்குள் வைக்க முடியாத நீங்கள், தமிழகத்தில் உலவும் கொடும் குற்றவாளிகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்?
"அண்ணன், மாமன்" என பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் அடைமொழிகளை உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்வது, சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என வெற்று விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்காமல், மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மண்டிக் கிடக்கும் உங்கள் கட்சியை முதலில் தூர்வாரி சுத்தப்படுத்துங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.