தமிழக செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் , தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறினார்.