புதுடெல்லி,
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. இந்த போராட்டம் மத்திய அரசையே பின்வாங்க வைத்த நிலையில், கல்வித்துறை மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் களமிறங்கி உள்ளது.
இதற்கிடையே பிரபல ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக நெறியாளர் கேள்வி எழுப்பினார். சில நொடிகள் யோசித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, முன்னாள் முதல்-அமைச்சர்களான மு.க. ஸ்டாலின் (தமிழ்நாடு), பினராயி விஜயன் (கேரளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.
அதில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை குறிப்பிட்ட அபிஜீத் திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக மேம்படுத்தியதாக குறிப்பிட்டார்.
மேலும், கேரள முன்னாள் முதல்-மந் திரி பினராயி விஜயனின் ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் வலுவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டினார்.
டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பள்ளிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பாராட்டினார். இப்படி மூன்று முதல்வர்களின் நிர்வாக அணுகுமுறைகளை குறிப்பிட்டு, அவர்கள் சிறந்த முதல்வர்களாக இருந்ததாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.
இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்த கருத்துகளை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஷெஹ்சாத் பூனாவாலா, வீடியோ வெளியிட்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சாடியுள்ளார். அந்த மூன்று தலைவர்களும் தங்கள் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறிய அவர், இதுபோன்ற தலைவர்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமை சிறந்த முதல்-அமைச்சர்களாக தேர்வு செய்திருப்பதை விமர்சித்தார்.