சென்னை,
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இம்மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரைய்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, சுதந்திர தினத்திற்கு இன்னும் 10 நாட்களே இடைவெளி உள்ள நிலையில், தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.