சென்னை,
திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில், விசிக சார்பில் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார். அப்போது தேர்தலில் போட்டியிடுவது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது;
”நீண்ட நெடிய உளவியல் போராட்டங்களுக்கு பின்னர், பலரோடு கலந்து ஆலோசித்த பின்னர், தற்போது நிலவும் அரசியல் சூழலை அறிந்து, எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, எதிர்பார்த்தவர்களின் வருத்தங்களை நினைத்தும் வருத்தத்தோடு வேட்பாளர்களை அறிவிக்கிறேன்.
தமிழக அரசியலில் அதாவது மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார் கோயிலில் நான் போட்டியிடுகிறேன்.” என்றார்.