AI Photo 
தமிழக செய்திகள்

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றது ஏன்? - பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்போது, ஊழல் பட்டியல்தான் பூதாகரமாக நிற்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது (2026) கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. அப்போது, ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தார். தற்போது, ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக இருக்கிறார்.

74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், 7 முறை அ.தி.மு.க.வும், 6 முறை தி.மு.க.வும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைத்துள்ளது. அதுவும் 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை, முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அடுத்த 59 ஆண்டுகள் தி.மு.க., அ.தி.மு.க. என திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி செய்து வந்தன.

பெரும்பான்மை இல்லை

திரைப்பட நடிகரான எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினாலும், 1977-ம் ஆண்டே அவரால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால், 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் ஜோசப் விஜய், கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து அசத்தி இருக்கிறார்.

ஆனாலும், த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்துள்ளது.

ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா?

இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா? என்பது ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், மற்றொரு பக்கம் த.வெ.க.வை ஆட்சியமைக்க விட்டுவிடக்கூடாது என்பதில், ஆண்ட கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதும் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

அதுவும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக (54 ஆண்டுகள்) எதிர் எதிர் துருவங்களாக பயணித்த கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எப்படி ஒன்று சேர்ந்து த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க முயற்சித்து இருக்கும்? என்று அனைவரும் நினைக்கலாம்.

திரை மறைவில் பேச்சு

தேர்தல் முடிவு வந்த நாளான மே 4-ந் தேதி இரவு முதல் 8-ந் தேதி வரை தமிழக அரசியலில் என்னென்னவோ நடந்து இருக்கிறது. அப்போதே, திரை மறைவில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி நடப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்ததால், தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி பேசிய விவகாரம் அத்துடன் காணாமல் போனது.

நடந்தது உண்மையா?

ஆனால், இப்போது அந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆட்சி அமைக்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது என்று, அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் வெளிப்படையாக தெரிவித்தார். அதே கருத்தை இப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் இதுவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பிலோ, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. அதனால், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பதை உறுதியாக சொல்லமுடியாது. நடந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

AI Photo

எதிரும் புதிருமான கட்சிகள்

அது எப்படி, கடந்த 54 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிரும் புதிருமான கட்சிகளாக இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இப்படி நடந்து கொண்டிருக்கும்?. தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் தாக்கி பேசிக்கொண்டனர். அப்படி இருந்தும் இது எப்படி நடந்தது?. அதற்கு என்ன காரணம்? என ஆராயாமல் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற முதல் 15 ஆண்டுகள் ஆட்சியாளர்கள் அரசை நடத்த எந்தக் கடனும் வாங்கவில்லை. வரவு குறைவாக இருந்தாலும் அதற்குள்ளேயே செலவையும் வைத்துக்கொண்டனர்.

வெள்ளை அறிக்கை

ஆனால், 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகும், அதன்பிறகு 1977-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், திட்டங்களுக்கு என்ற பெயரில் கடன்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அந்த கடன்கள் தான் இப்போது ரூ.10 லட்சம் கோடி என்ற அளவில், இமயமலை போல் வளர்ந்து நிற்கிறது.

இப்போது, ஆட்சி அமைத்திருக்கும் த.வெ.க. அரசு, தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறியிருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், தோண்ட.. தோண்ட.. ஊழல் நடந்திருப்பதே தெரியவருகிறதாம். தற்போது, எந்தத் துறையில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது? என்று பட்டியல் தயாராகி வருகிறதாம். வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்போது, ஊழல் பட்டியல்தான் பூதாகரமாக நிற்கும் என்று சொல்லப்படுகிறது.

கரைபுரண்ட ஊழல்

அதுவும், தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் ஊழல் கரைபுரண்டு ஓடியிருக்கிறதாம். எப்போதுமே, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சாதகமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தனித்தனியாக இருப்பார்களாம். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுக்கு சாதகமான அதிகாரிகள் அப்போது உயர் பதவிக்கு வந்துவிடுவார்களாம்.

ஆனால், இப்போது த.வெ.க. எனும் புதிய கட்சி ஆட்சியை பிடித்திருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சாதகமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒதுக்கிவிட்டு, புதிதாக அதிகாரிகளை உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அதிகாரிகள்தான் ஊழலை வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறார்களாம்.

AI Photo

காரணம் இதுதான்

இதுபோன்று எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதை முன்கூட்டியே அறிந்தே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இனி வெள்ளை அறிக்கை வரட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.