தமிழக செய்திகள்

த.வெ.க. ஆட்சிக்குப்பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

கடந்த ஆட்சியில் மின்துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மின் கட்டண உயர்வு

இந்நிலையில் த.வெ.க. ஆட்சிக்கு பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வு குறித்து, அமைச்சர் ஒன்று சொல்கிறார், நிர்வாகம் ஒன்று சொல்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

டேபிள் ரீடிங்

இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “மின்வாரியம் தானாக 3 லட்சத்திற்கு அதிகமான இணைப்புகளை மறு ஆய்வு செய்த போது, 2,719 மிஸ் மேட்ச் ஆனது. தவறான கணக்கிடுதலால் அது நடந்தது. டேபிள் ரீடிங் என்று ஒன்றை செய்து வந்துள்ளனர். நேரடியாக ரீடிங் செய்யாமல், முந்தைய ரீடிங்கை கணக்கில் செய்துள்ளனர். நேரடியாக ரீடிங் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 அமைச்சர்கள்

செய்தியாளர் சந்திப்பில் நான் தடித்த வார்த்தைகளை பேசுவதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். 45 டெண்டர்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருவது அவருக்கு தெரியும்

கடந்த ஆட்சியில் மின்துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். 2021-க்கு பின்னர் மின்துறை அமைச்சர் சிறைக்குச் செல்கிறார். பின்னர் இன்னொரு அமைச்சர், இன்னொரு அமைச்சர் என மின்துறைக்கு 4 அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் வந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

இதனிடையே முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “மின்வாரிய கொள்கை விளக்க குறிப்பை படித்தேன். 5 பக்கங்களில் தான் டேட்டாக்கள் இருக்கிறது. மீதமெல்லாம் புள்ளி விபரம் இல்லாத பழைய குறிப்புகள் தான் உள்ளது. 3,437 கேங் மேன் மாறுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை” என்று கூறினார்.