சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை, கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
போதை ஒழிப்பு சம்பந்தமாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தேன். போதைப்பொருள் ஒழிப்பு கேரள தூதுவராக மோகன்லால் இருக்கிறார்.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கும்பல் செயல்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் கேரளம் வர அழைப்பு விடுத்து இருக்கிறேன்.
தமிழ்நாடு கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விரைவில் 5 மாநில டிஜிபிக்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை விஜய் ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆப்ரேசன் டூபான் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், “கேரளத்தில் போதைப்பொருளுக்கு எதிராக, அதன் உறைவிடங்களை கண்டறிந்து வேரோடு களைய அரசு உறுதி கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆபரேஷன் டூபான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் பங்களிப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் போதைப்பொருளை ஒழிக்க கேரளம் போலீஸ் டி.ஜி.பி., தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில டி.ஜி.பி.க்கள் உடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) நான் முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்பு கொண்டு பேச உள்ளேன்.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கும். ஏற்கனவே, இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடினேன். ஆபரேஷன் டூபான் திட்டத்தின் கீழ். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது” என்று அவர் கூறி இருந்தார்.