எட்டயபுரம்,
வீடு புகுந்து புது மாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியது ஏன்? என்பது குறித்து கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்து கணேசன் (வயது 29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த 2-ந்தேதி மதியம் முத்து கணேசன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று முத்து கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார்.
படுகாயமடைந்த முத்து கணேசனுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்வா (23), அவருடைய சித்தப்பா மகன் கருப்பசாமி (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து, வீடுபுகுந்து முத்து கணேசனை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.
மதுரையில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில், முத்து கணேசனின் தம்பி மாரிசெல்வம் ஒரு சிறுமியுடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், மாரிசெல்வத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மாரிசெல்வம் அவமானப்படுத்திய ஆத்திரத்தில் அவரது அண்ணன் முத்து கணேசனை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.