சென்னை,
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்க ஒரு அமைச்சரை கூட அனுப்பாதது ஏன்? - டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மை பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் ஜோசப் விஜய், முதல்-அமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்க ஒரு அமைச்சரை கூட அனுப்பாதது ஏன்?
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்ட களத்திற்கு தள்ளியுள்ளது.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.