தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி மனைவி, குழந்தையுடன் கொத்தனார் சாவு

மின்சாரம் தாக்கியதில் கொத்தனாரும், அவருடைய மனைவி மற்றும் 2 வயது குழந்தையும் பலியானார்கள்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் நிவாசா ரத்தினம்(வயது 30). கொத்தனார். இவருடைய மனைவி ஹேமா(25). இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை நிகன்யா.

நேற்று மாலை நிவாசா ரத்தினம், தனது வீட்டின் பின் பகுதியில் மின் விளக்கை ஒளிர செய்வதற்காக சுருண்டிருந்த மின்வயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

மனைவியும், குழந்தையும் பலி

இதனால் துடிதுடித்து கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்காக அவருடைய மனைவி ஹேமா ஓடிச்சென்று அவரைப்பிடித்து இழுத்தபோது, ஹேமா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனிடையே 2 வயது குழந்தை நிகன்யா தாயின் அருகே சென்றதில் குழந்தையையும் மின்சாரம் தாக்கியது.

இதில் நிவாசா ரத்தினம், அவருடைய மனைவி ஹேமா, இவர்களுடைய குழந்தை நிகன்யா ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.