ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய தொரப்பள்ளி சாலையில், சுற்றுலாப் பயணிகளின் காரை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில், குட்டிகளுடன் கூடிய காட்டு யானைக்கூட்டம் ஒன்று சாலையை கடக்க முயன்றது.
அப்போது, அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளின் கார் ஒன்று யானைகள் கடப்பதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது. குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகளில், ஒரு காட்டு யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த அந்த யானை, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் காரை நோக்கி ஓடிவந்து, தனது தும்பிக்கை மற்றும் தந்தங்களால் காரின் முன்பகுதியை ஆக்ரோஷமாக முட்டி தள்ளியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது.
காரின் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறியடித்தபடி உள்ளேயே முடங்கினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காரை விட்டு கீழே இறங்காததால், எந்தவித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
யானை காரை தாக்கும் இந்தத் திக் திக் காட்சிகள், பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்து வருகிறது. வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் போது, யானைகள் சாலையை கடந்தால் வாகனங்களை தூரத்திலேயே நிறுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் காரை விட்டு கீழே இறங்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.