தமிழக செய்திகள்

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை; எச்சரிக்கை விடுத்த வனத்துறை

தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் ஆங்காங்கே பலா மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழங்களின் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் எஸ்டேட்டுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், சில நேரங்களில் ஒற்றையானையாகவும் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

பலாப்பழம் அருகே ஒற்றையானை

இந்த நிலையில், நேற்று மதியம் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் திடீரென ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்தது. பட்டப்பகலில் வந்த அந்த யானை, அங்கிருந்தஅங்கிருந்த பலா மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தது.

யானை பதுங்கியது

அப்போது அந்த வழியாக பேருந்து ஒன்று வந்தது. பேருந்தின் சத்தம் கேட்டதும், பலாப்பழம் அருகே நின்று கொண்டிருந்த அந்த காட்டுயானை, சட்டென்று பலா மரத்தின் அடியில் சென்று மறைந்து பதுங்கி கொண்டது. பேருந்திற்கு வழிவிடுவது போலவும், தன்னை மறைத்து கொள்வது போலவும் அந்த யானை செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பயணிகள் ரசிப்பு

பேருந்துக்குள் இருந்த பயணிகள், பட்டப்பகலில் மிக அருகில் யானை பதுங்கி நின்ற இந்த அபூர்வ காட்சியை தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனத்துறை எச்சரிக்கை

தற்போது வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் பலாப்பழ சீசன் தீவிரமடைந்துள்ளதால், காட்டுயானைகளின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.