தமிழக செய்திகள்

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை உலா

காட்டு யானை அருகே சென்று வீடியோ எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்கு சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் குன்னூர் மரப்பாலம், பர்லியார் பகுதிகளில் சாலை நடுவே காட்டு யானை ஒன்று உலா வந்தது. அதோடு வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை அருகே சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டு யானை சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களை நிறுத்தி யானை கடந்து செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.