சென்னை,
மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவும், சிறப்புப் பிரிவினராகவும் கருதி. பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், என். செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனுடன் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, கர்நாடகாவில் சீவில் சர்வீசஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சீவில் சர்வீஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா? என்பது குறித்து வருகிற ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.