தமிழக செய்திகள்

அரசலாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?

அரசலாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?

பரமநல்லூரில் அரசலாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாயத்தாமரை செடிகள்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆறு தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆற்றை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT