சேலம்,
திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
* மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழி கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி, தமிழ் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கட்சி மாறிச் செல்வதை கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
* அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை குறையின்றி முழுமையாக நடத்திட வேண்டும்.
* கீழடி அகழாய்வு அறிக்கையில் தேவையற்ற திருத்தம் செய்யக்கூடாது.
* நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து நெய்வேலியில் ஜூலை 7-ந் தேதி தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
* ஆணவப் படுகொலைகளை தடுக்கும் சட்டத்தை விரைவாக கொண்டுவர வேண்டும்.
* புதிதாக அமைந்துள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு, தந்தை பெரியார் ஒரு கொள்கைத் தலைவர் என்று பிரகடனப்படுத்துகிறது. அது செயல்பாடுகளிலும், கொள்கை நிலைப்பாட்டிலும் எந்த அளவுக்கு நடைமுறையில் வருகிறது என்பதை பொருத்தும், எப்போதும் எந்த ஆட்சியாக வந்தாலும், அவர்களிடம் கொள்கை ரீதியாக ஆதரவு காட்ட வேண்டியவற்றை ஆதரிக்கவோ, எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கவோ, தயவு தாட்சயண்யமின்றி சுட்டிக்காட்டவோ தயங்காத இயக்கம் இது.
தி.மு.க.வுடன் திராவிடர் கழகத்திற்கு உள்ள உறவு, தாய் - பிள்ளை உறவு. அந்த உறவு தொடர்ந்து இருக்கும். அதே நேரத்தில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் யாராயினும், நமக்கு எப்போதும் உள்ள கொள்கை பார்வையே தொடரும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.