தமிழக செய்திகள்

அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!

"தளபதி.. தளபதி வாழ்க. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க" என்ற பாடலை வேல்முருகன் பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பாடகர் வேல்முருகன், விஜய்யுக்கு அறுபடை வீடு முருகனின் படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

அப்போது, மேடையில் நடனமான தான் விரும்புவதாகவும், அதற்காக ஒரு பாடலை பாடுமாறும் வேல்முருகனிடம் கேட்டுக்கொண்டார். இதனால், ரசிகர்களும் உற்சாகமானார்கள். விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க, "தளபதி.. தளபதி வாழ்க. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க" என்ற பாடலை வேல்முருகன் பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினார். அவருடன் சிறுமி ஒருவரும் ஆடினார். உடனே, உற்சாகமான விஜய்யும் நடனமாடி அசத்தினார். இதனால், அரங்கம் அதிர விசில் பறந்தது. ஆண் மற்றும் பெண் தொண்டர்களும் உற்சாகமாக நடனமாடினர்.