3-வது மாடி 
தமிழக செய்திகள்

துணியை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண்

குடியிருப்பின் சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை,

தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துணியையை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.

விபத்து

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் லட்சுமி (வயது 34) என்ற பெண் வசித்து வருகிறார். லட்சுமி இன்று காலை தனது வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்தச் சென்றுள்ளார்.

அப்போது, பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி துணிகளை காய வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவர் திடீரென இடிந்து சரிந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த பெண், சுவருடன் சேர்த்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் அவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

தீவிர சிகிச்சை

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிருப்தி

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பின் சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.