தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே வீட்டின் உள்ளே துணி மாற்றும்போது விஷப்பூச்சி கடித்த பெண், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் எல்லைக்குட்பட்ட கொல்லங்கிணறு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 34). லாரி ஓட்டுநரான இவருடைய மனைவி பிரியா(32). இவர் கடந்த 20-ம் தேதி மதியம் தனது வீட்டில் துணி மாற்றிக் கொண்டிருந்தபோது, இடது கை பெருவிரலில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக கணேசன் தனது பைக்கில் மனைவியை அழைத்துச் சென்று, அருகில் உள்ள ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில், நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.