தஞ்சாவூர் 
தமிழக செய்திகள்

தஞ்சாவூரில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் உயிரிழப்பு...

சின்னபொண்னு என்ற பெண் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அரசு நெல் சேமிப்புக் கிடங்கு

தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.சுத்திப்பட்டு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையத் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வழக்கம் போல அனைவரும் நெல் சேமிப்புக் கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்

அப்போது எதிர்பாராத விதமாக அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தன. இதில் சின்னபொண்னு மற்றும் சகுந்தலா ஆகிய பெண்கள் நெல் மூட்டையின் அடியில் சிக்கினர். இதனால் அவர்கள் அலறி கத்திக் கூச்சலிட்டனர்.அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வேலை செய்த சக ஊழியர்கள் நெல் மூட்டைகளை அகற்றினர்.

பெண் உயிரிழப்பு

ஆனால் இதில் சின்னபொண்னு என்ற பெண் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சகுந்தலா என்ற பெண் படுகாயமடைந்தார். இதையடுத்து படுகாயமைந்த சகுந்தலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் உயிரிழந்த சின்னபொண்ணுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.