தமிழக செய்திகள்

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பெண் ஒருவர், வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர் உடுத்தியிருந்த சேலையில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மட்டக்கடை, கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரேமா (வயது 58). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரேமா தனது வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ, அவர் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையில் எதிர்பாராதவிதமாக பற்றிக் கொண்டது.

கண் இமைக்கும் நேரத்திற்குள் தீ உடல் முழுவதும் பரவியதில் அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பிரேமாவை மீட்டு உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருந்தபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்துள்ளார். விபத்து நடந்த விதம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.