சேலம்,
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி திவ்யபாரதி (வயது 31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செந்தில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் திவ்யபாரதி தனது குழந்தைகளுடன் ஜான்சன்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் பாட்டிலில் இருந்த வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை பழச்சாறு என நினைத்து எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவருக்கு கடுமையான வயிறு எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திவ்யபாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக செந்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.