குப்பம்,
குப்பம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை வெட்டிக்கொன்ற மனைவி உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த தேவதாசனபள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் போயனபள்ளியைச் சேர்ந்த ஹாசினி (30) என்ற பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளாள். ரமேஷ் தனது மனைவி, குழந்தையுடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியரயாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசினி தனது கணவர் ரமேஷ், குழந்தை மவுனிகாவோடு தாய் வீட்டுக்கு வந்தார். மறுநாள் தன்னை மல்லப்பாமலையில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஹாசினி, ரமேசிடம் கூறினார். அதன்பேரில் ஹாசினி, குழந்தையை தூக்கி கொண்டு ரமேசின் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றார்.
ஆனால், அவர்கள் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு விரவில்லை. ஹாசினியின் தாய் ருக்கம்மா உடனே குப்பத்தை அடுத்த ரால்லபூடுகூரு போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் போலீசார் மல்லப்பாமலைக்கு சென்று தேடினர். அங்கிருந்த புதரில் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைகாக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹாசினி, குழந்தையை காணவில்லை. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹாசினி தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் போயனபள்ளியைச் சேர்ந்தவரும், தன்னை விட வயது குறைந்த யுகேந்தர் என்ற வாலிபருடன் ஹாசினி பழகி வந்தார். அது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ரமேஷ், ஹாசினியிடம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய யுகேந்தருடன் ஹாசினி திட்டமிட்டார். அதன்படி கணவரிடம் மல்லப்பாமலைக்கு போகலாம் எனக்கூறி குழந்தையை தூக்கி கொண்டு கணவருடன் அங்கு சென்றுள்ளார். மல்லப்பாமலைப் பாதையில் ஏறும்போது 3-வது வளைவில் ஹாசினி தனது கைப்பையை கீழே போடுவதுபோல் நடித்துள்ளார்.
உடனே ரமேஷ் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு கைப்பையை எடுக்கச் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த யுகேந்தர் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் ரமேசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, உடலை முட்புதரில் வீசினர்.
இதையடுத்து ரமேசின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு யுகேந்தர் தனது கள்ளக்காதலியான ஹாசினி, குழந்தை மவுனிகாவை அழைத்துக்கொண்டு குப்பம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு, மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு யுகேந்தர் உள்பட 3 பேர் ரெயிலில் ஏறி தப்பி சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து யுகேந்தர், ஹாசினி, குழந்தை மவுனிகா மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் என 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.