சேலம்
சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் கோபால். அவருடைய மனைவி மரகதம்(வயது 29). இவர் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மரகதம் நேற்று காலை தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் நுழைவு வாயில் முன்பு மரகதம், தான் மறைத்து வைத்து 5 லிட்டர் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றினார். மேலும் அவர் அதை குழந்தைகள் மீதும் ஊற்ற முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் மரகதம் கூறும் போது, எனது கணவரை கடந்த 1 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் அவருக்கு பல முறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் போதிய வருமானம் இல்லாததால் நானும் எனது குழந்தைகளும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஆகையால் எனது கணவருக்கு ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு 6 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.