சென்னை,
பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு எடுப்பது குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது உடல்நலப் பிரச்சினைகளைத் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசும் 'Gen Z' (90-களின் இறுதி மற்றும் 2000-களில் பிறந்தவர்கள்) தலைமுறையினரின் நேர்மைக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முந்தைய தலைமுறையினர் உடல்நலக் குறைவு அல்லது மாதவிடாய் வலியை மறைத்து, வேறு காரணங்களைக் கூறி விடுப்பு எடுத்த நிலையை Gen Z ஊழியர்கள் மாற்றியுள்ளனர். "மாதவிடாய் வலி காரணமாக இன்று பணிக்கு வர இயலாது" என நேரடியாகவும் நேர்மையாகவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் இவர்களின் அணுகுமுறை, பணியிடங்களில் நிலவிவந்த தேவையற்ற தயக்கங்களை உடைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.
தேசிய அளவில் இந்தியாவில் மாதவிடாய் விடுப்புக்கான தனிச் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. எனினும், பீகார், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இந்த விடுப்பை நடைமுறைப்படுத்தியுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் இதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், "இது பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தலாம்" என்ற கவலையையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விதிகளை வகுக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு இரண்டையும் பாதிக்காத வகையில் முறையான கொள்கையை உருவாக்கத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.