சென்னை,
ஆடி மாத பிறப்பையொட்டி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் மாதங்களில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும்.
இந்தநிலையில், இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவிலில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றடு. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் அம்மன் ஆலயங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் வழிபாடு
மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே பாலபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தனர். பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு மா விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வீட்டில் பால்பாயாசம் செய்து அம்மனை வழிபட செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.