கோவை,
கோவை சிங்காநல்லூர் சிஜி ரெஜிடென்சி பகுதியில் கடந்த 8-ந் தேதி வெளிமாநில பெண்கள் சிலர் யாசகம் பெறுவதற்கு வந்தனர். அப்போது யாசகம் பெற்று விட்டு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் செம்பு கம்பிகள், ஏ.சி. செம்பு குழாய்கள் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்குள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது .
இந்த நிலையில், மீண்டும் அதே பகுதிக்கு வந்த வடமாநில பெண்களை, அப்பகுதி மக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்கள் ஆளுக்கொரு திசையில் கூச்சலிட்டபடி ஓடினர்.
நீண்ட நேரம் போராடி அந்த திருட்டு கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் ஆதார் கார்டு இல்லாததால் அந்த கும்பலை போலீசார் விடுவித்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.