கொல்கத்தா,
மேற்கு வங்காளம் மாநிலம் பாங்குராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது;
பாஜகவின் அடிப்படை அடையாளமே பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்புடன் ஒன்றிணைந்ததாகும். அனைத்து மாநிலத்திலும் நமது சகோதரிகள், மகள்கள் பாஜக மீது ஆசியைப் பொழிகின்றனர். வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்கும் பணியில் நமது மகள்களின் பங்களிப்பு விரிவடைவதை விரும்புகிறோம். மேற்குவங்க சகோதரிகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் துரோகம் இழைத்துள்ளது. திரிணமூல் காங்கிரசை தண்டிக்க வேண்டுமா? வேண்டாமா?
மேற்கு வங்காளத் தேர்தல் புதிய வரலாற்றை உருவாக்கப் போகின்றன. திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து கும்பல்களுக்கும் குண்டர்களுக்கும் நான் ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன். ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு முன் உங்கள் காவல் நிலையங்களில் சரணடையுங்கள், இல்லையென்றால் இங்கு பாஜக ஆட்சிக்கு வரும்போது, நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.
வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தால், பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். ஒரு பெண்ணின் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்தால்? அவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். அதற்கு ஒரு ரூபாய் கூட செலவாகாது. வங்காள சகோதரிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 36,000 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும். குழந்தை பிறந்த பிறகு, சகோதரிகளின் மகள்களின் கல்விக்காக மத்திய அரசு ரூ. 5,000 வழங்கும். பெண்கள் சுயதொழில் செய்வதற்காக ரூ. 20 லட்சம் பெறுவார்கள். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு கூடுதலாக ரூ. 9,000 வழங்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.