தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5,000 வரவு வைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை,

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

“நமது அரசு சார்பில் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்தது மட்டுமின்றி, வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினோம்.

சென்ற ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து, ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை நிறைவேற்றினோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அது சாத்தியமே இல்லை என சிலர் சொன்னார்கள்.

ஆனாலும் நிதி நெருக்கடியை சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். முதலில் 1 கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இந்த திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், அவர்களுக்கு அடிமையாக தமிழ்நாட்டில் இருக்கும் இன்னொரு கூட்டமும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சூழ்ச்சி செய்வதாக தகவல் வருகிறது.

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். இந்த திட்டத்தை 3 மாதங்கள் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாவீர்கள் என்பது உங்கள் வீட்டில் ஒருவனாக எனக்கு நன்றாக தெரியும்.

கடும் வெயிலில், வேலைக்கு செல்ல கடினமான கோடைக்காலத்தில் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்று என்னால் உணர முடிகிறது. உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிப்பீர்கள்? உங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மாத்திரை வாங்கிக் கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில் அவர்களின் உணவு மற்றும் கல்விக்கான செலவுகளை செய்ய முடியுமா?

இந்த கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்துதான் ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கிறேன். அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! அடுத்த திராவிட மாடல் ஆட்சி 2.0 ஆட்சிக்காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.