தமிழக செய்திகள்

மழைநீர் தேங்குவதை தடுக்க மாதவரத்தில் ரூ.22.88 கோடியில் புதிய வடிகால் அமைப்பு பணி தீவிரம்

இந்த மழைநீர் வடிகாலானது வி.எஸ். மணி நகரிலிருந்து புழல் உபரிநீர் வெளியேறும் இடம் வரை கட்டப்படுகிறது.

சென்னை,

மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் கட்டும் பணி

இதன் ஒரு பகுதியாக, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகாலுக்கு மாற்றாக ரூபாய் 22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் 2 மீ. x 2 மீ. இரண்டு துளைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலின் அடிப்பகுதி மட்டம் சீராக இல்லாமல், நீரோட்டம் தடைபட்டதாலும், ரெட்டேரி வடக்குப் பகுதியின் உபரிநீரை வெளியேற்ற ஏற்கனவே இருந்த வடிகாலின் அளவு போதுமானதாக இல்லாத காரணத்தினாலும் பழைய மழைநீர் வடிகால் இடித்து அகற்றப்பட்டு புதிய மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மழைநீர் வடிகாலானது வி.எஸ். மணி நகரிலிருந்து புழல் உபரிநீர் வெளியேறும் இடம் வரை கட்டப்படுகிறது. இதனால் எம்.ஆர்.எச். சாலை, பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.