சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமாகி உள்ளனர். இந்த நிலையில், கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டங்களின் போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலில் வெற்றியை குறி வைத்து அனைவரும் பணியாற்றுங்கள். அ.தி.மு.க.வில் நல்ல முறையில் இருந்தவர்கள் எல்லாம் மாற்று கட்சிக்கு சென்று தங்கள் மதிப்பை இழந்து என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை எல்லாரும் நினைத்துப் பாருங்கள். கரூர் தொகுதி ஏற்கனவே நாம் வெற்றி பெற்ற தொகுதி. எனவே, வரப்போகும் இடைத் தேர்தலிலும் கரூர் தொகுதியின் வெற்றிக் கனியை அ.தி.மு.க.வே பெற வேண்டும்.
கட்சியில் இருந்து சென்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்காமல், அனைவரும் நம்பிக்கையோடு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதே போன்று, கட்சியின் வளர்ச்சிக்காகவும் நீங்கள் முழுமூச்சாக உழைக்க வேண்டும். கட்சிப் பணியை சிறப்பாக செய்பவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டி சண்டை போடாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.