நாகர்கோவில்:
மது குடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அனிஸ்குமார் (வயது 33), தொழிலாளி. இவருடைய மனைவி சிந்துஜா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அனிஸ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. மேலும் மது குடிப்பதை சிந்துஜா கண்டித்து வந்தார்.
இந்தநிலயில், நேற்றுமுன்தினமும் மதுபோதையில் அனிஸ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை சிந்துஜா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிஸ்குமார் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார்.
இதற்கிடையே சிந்துஜாவும், குழந்தைகளும் அருகே உள்ள கடைக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்தபோது, அறையில் அனிஸ்குமார் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.