தமிழக செய்திகள்

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கடும் மனவேதனையில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிபாசானம் குடித்து மயங்கி விழுந்தார்.

திருநெல்வேலி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே, மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சங்கர் (வயது 23). தொழிலாளி. இவருக்கும் நந்தினி (21) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இலங்கேஸ்வரன் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த நிலையில், சங்கர் கடந்த 1-ந் தேதி தனது மகன் இலங்கேஸ்வரனின் முதலாவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது சங்கர், தனது நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு, அவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னரும் சங்கர் நேற்று முன்தினமும் தொடர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நந்தினி, கணவரின் குடிப்பழக்கத்தை கடுமையாகக் கண்டித்ததாக தெரிகிறது.

விஷம் குடித்த சங்கர்

இதனால் கடும் மனவேதனையில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிபாசானம் (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.